நாம் வளரும்போழுதே நமக்கு சொல்லி
கொடுக்கப்பட்ட விஷயங்களுள் ஒன்று ' தங்கள்
சுற்றத்தை பார்த்து தேர்வு செய்வது '. நம்மை
சுற்றி உள்ளவர்களை பொருத்தே நாம் சமுதாயத்தில் மதீப்பீடு செய்யப் படுகிறோம்
என்றும்,ஆதலால் நாம் சுற்றத்தை சரி வர
தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் காதுகள் வலிக்க நமக்கு சொல்லப்பட்டுவிட்டது. ஆதலால் அதையே கூற நான் இதை
எழுதவில்லை. நம் தாதா பாட்டி காலத்துக்கு
வேண்டும் என்றால் இவ்விதி பொருந்தும். நாம்
வாழும் இந்த சூழலில் இவ்வாறு வாழ்வது கடினம். என்னைப் பொருத்தவரை சேற்றிலும்
செந்தாமரைகள் பூக்கத்தான் செய்யும். எப்பேர்பட்ட
சூழலிலும் , மிக மோசமானவர்கள் மத்தியிலும் கூட
நல்லவனாக வாழ இயலும். அது நம் மனதை பொருத்தே அமைகிறது. சுற்றம் சரி இல்லையேல்
கெடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டுதான். ஆனால் என் செய்ய ? இந்த காலக் கட்டத்தில் அவ்வாறு
பழகினோம் ஆனால் சுற்றம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும். நம்மை சுற்றி நல்லவர்கள்
தான் இருக்க வேண்டும் என்று நமக்கும் ஆசை இல்லையா என்ன? நம்மிடம் நல்லவர்களாக இருக்கிறார்களா என்று மட்டும் தான் பாக்க இயலுமோ ஒழிய , அவர்கள் அடிப்படையிலே நல்லவர்களா
என்று பார்க்க இயலாது. இது ஒன்றும் இயலாத காரியம் இல்லை.நடக்காத காரியமும் இல்லை.
கௌரவர்களுக்கு மத்தியிலும் ஒரு விகர்ணன் உண்டு; இராவணன் குடும்பத்திலும் ஒரு
விபிஷணன் உண்டு. கௌரவர்களுக்கு மத்தியில் பிறந்தது விகர்ணன் விதி.ஆனால் அதின்
ஊடேயும் நல்லவனாக திகழ்ந்தது அவன் செயல்.ஆனால் அவர்களிடம் நட்பு பாராட்டி நல்லவன்
என்ற அங்கிகாரத்தை இழந்தது கர்ணன் செயல். அது விதி எனக் கருதப்படாது. கர்ணன்
கொடுத்தான்; எல்லோருக்கும் கொடுத்தான்; ஏன் அந்த கண்ணனுக்கே கொடுத்தான். ஆனால்
பாஞ்சாலியின் அநீதிக்கு துணை நின்றான். இதை துரியோதனனுடைய நட்புக்காக செய்தான்
என்றும்,செய் நன்றி மறவாதவன் என்றும் கூறுபவர்கள் உண்டு. ஆனால் கர்ணன் பாஞ்சலிக்கு
நடந்த அநீதியை தடுக்காவிட்டாலும்,விளகியேனும் நின்றிருகலாம் அல்லவா?
விகர்ணன்,துர்யோதனன் தம்பியாக இருந்தாலும், பாஞ்சாலிக்கு நடந்த அநீதியின் போது பிதாமகர்
பீஷ்மர்,குரு துரோணர் என அனைவரும் மௌனம் சாதித்த போது அவளுக்காக குரல் கொடுத்தான். கௌரவர்களில்
கர்ணன்,அஸ்வதாமனுக்கு இணையான வில் வித்தை கற்றவன் விகர்ணன். மகாபாரதத்தில் மிக
உண்ணதமான ஒருவன் விகர்ணன் ஆவான்.கெடுவதற்கு அத்தனை சந்தர்பங்களும் இருந்த
பொழுதிலும், தன் சுயத்தை இழக்காமல் வாழ்ந்து காட்டியவன்.
peer pressure என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை
உண்டு. நண்பர்களின் கட்டாயத்துக்கு ஆட்பட்டு நடப்பது.இந்த தலைமுறையினர் அதிகமாக
சிக்குண்டு கிடக்கும் விஷயம் இதுவே.சந்தரப்ங்களின் மீதும், சுற்றத்தின் மீதும் பழி
போடுவதை விட்டு விட்டு உங்கள் சுயத்தை இழக்காமல் வாழ கற்றுக் கொள்ளுங்கள். உங்களை
சுற்றி உள்ள அனைவரும் செய்வது தவறு என்று பட்டால் விழகி நில்லுங்கள். பலர் ஒரு தவறை
செய்தாலும் அது சரி என்றாகாது. .நல்லவனாக வாழ நினைப்பதே நம்மை நல்ல வழிகளில்
சேர்த்து விடுகின்றது உங்கள் உள்மனம் ஏற்காத எந்தச் செயலையும் செய்யாதீர்கள். சூழலும்
சுற்றமும் அமைவது விதி. அதில் நம் செயலை பொருத்தே நம் கர்மங்கள் அமைந்து
விடுகின்றன.கண்ணனாக இல்லாவிட்டாலும் விகர்ணனாகவாது இருக்க முயல்வோம்.
Comments
Post a Comment